ஆட்சி பொறுப்பேற்று 5 மாதங்களில் ஏராளமான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று பதிலுரை அளித்தார். இதில் தமிழக அரசு செயல்படுத்திய திட்டங்கள் குறித்தும் மேலும் பல புதிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார்.
அப்போது பேசிய அவர், 'தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்படும். திமுக அரசு சொன்னதை மட்டும் செய்யவில்லை. சொல்லாததையும் செய்து வருகிறது.
திட்டங்களை அறிவிப்பது மட்டுமின்றி அவற்றை செயல்படுத்த அரசாணைகளை வெளியிட்டு வருகிறோம்.
ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டிருந்த 75% திட்டங்களுக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பெரும்பலான முக்கிய தேர்தல் வாக்குறுதிகளை 5 மாதங்களில் நிறைவேற்றியுள்ளோம்.
மக்களிடையே திமுக அரசு மீது அவ நம்பிக்கை ஏற்படவில்லை. சொன்னதை மட்டும் செய்யாமல், சொல்லாததையும் செய்யும் அரசுதான் இது. ‘இல்லம் தேடி கல்வித் திட்டம்' வாக்குறுதியில் இல்லை. ஆனால், மாணவர்களின் இல்லத்திற்கே சென்று கல்வி அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளை அனைவரும் விரும்பும் பள்ளிகளாக மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஸ்மார்ட் கிளாஸ் திட்டம் செயல்படுத்தப்படும்' என்றார்.