தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்ற 18வது மெகா கரோனா தடுப்பூசி முகாமில் 17.34 லட்சம் பயனாளிகள் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், முதல்வரின் உத்தரவுப் படி தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்களில் மெகா கரோனா தடுப்பூசி பணிகள் நடைபெற்றது.
இதுவரை நடைபெற்ற 17 மெகா கரோனா தடுப்பூசி முகாம்களில் 3 கோடியே 15 இலட்சம் பயனாளிகள் பயனடைந்துள்ளார்கள்.
மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி 15-18 வயதுடைவர்களுக்கு 03-01-2022 முதல் கரோனா தடுப்புசி வழங்கும் திட்டத்தின் படி தமிழ்நாட்டில் 33,46,000 பயனாளிகளுக்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தினை முதல்வர் 03-01-2022 அன்று அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சைதாப்பேட்டை, சென்னையில் துவக்கி வைத்தார். இதுவரை (08-01-2022) மொத்தம் 22,50,444 (67.26%) நபர்களுக்கு முதல் தவணை வழங்கப்பட்டுள்ளது.
இன்று (08-01-2022) நடைபெற்ற 18வது மெகா கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் 15 வயதிற்கு மேற்பட்ட 17,34,083 பயனாளிகளுக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இதில் முதல் தவணையாக 5,71,795 பயனாளிகளுக்கும் இரண்டாவது தவணையாக 11,62,288 பயனாளிகளுக்கும் கரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை 87.03% முதல் தவணையாகவும் 60.01% இரண்டாம் தவணையாகவும் கரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது.
இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை மாவட்டத்திற்க்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற
கோவிட் தடுப்பூசி முகாம்களை நேரடி கள ஆய்வு செய்தார்.
மேலும், மாநிலத்தில் இன்று (08.01.2022) நடைபெற்ற 18வது மெகா கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமினை முன்னிட்டு நாளை (09.01.2021) கரோனா தடுப்பூசி பணிகள் நடைபெறாது என தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.