கம்பம்: தேனி மாவட்டம், கம்பம் ஆங்கூர் பாளையம் சாலையில் மேல்நிலைப் பள்ளி அருகே டாஸ்மாக் கடையை அமைத்து வருவதால், கடை அமைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று மாணவ, மாணவியர் மாவட்ட ஆட்சியருக்கு 1000 அஞ்சல் அட்டைகளில், புகார் மனுக்களை கையெழுத்திட்டு அனுப்பியுள்ளனர்.
தேனி மாவட்டம், கம்பம் ஆங்கூர் பாளையம் சாலையில் உள்ளது ஸ்ரீ முத்தையா பிள்ளை நினைவு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு கம்பம் மற்றும் வட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் ஆயிரம் மாணவ மாணவியர் படித்து வருகின்றனர். இந்தச் சாலையில் கம்பம் நகராட்சி எரிவாயு தகனமேடை எதிர்ப்புறம் அரசு மதுபான கடை அமைப்பதற்கு கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.
இதை அறிந்த மாணவ,மணவியர் அவர்களின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர் . இந்த பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்தால் குற்ற நிகழ்வுகள் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும், ஆதலால் டாஸ்மார்க் கடை அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதிக்க வேண்டும் என்று பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர் என சுமார் ஆயிரம் பேர் அஞ்சல் அட்டைகளில் புகார் மனுக்களை எழுதி மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளிதரனுக்கு அனுப்பி வைத்தனர். மாவட்ட ஆட்சியரும் இது தொடர்பாக பரிசீலனை செய்வதாக மாணவ, மாணவியரின் மனுக்களுக்கு பதில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பாண்டி கூறுகையில், புதிதாக அமையவிருக்கும் டாஸ்மார்க் கடை அருகே இரண்டு மேல்நிலைப்பள்ளிகள், சத்துணவு கூடம் மக்கள் குடியிருப்பு போன்றவை உள்ளது.
டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும் இல்லை என்றால் பெற்றோர் மாணவ, மாணவிகளை அழைத்து மறியல் போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார்.