தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல்கட்ட திருப்புதல் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
ஒமைக்ரான் பரவல் அதிகரிப்பால் தமிழகத்தில் இரவுநேர ஊரடங்கு, ஞாயிறு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே பள்ளிகள்(1 முதல் 9 வகுப்பு), கல்லூரிகளுக்கு ஜனவரி இறுதி வரை விடுமுறை, கல்லூரி தேர்வுகள் காலவரையின்றி ஒத்திவைப்பு போன்ற அறிவிப்புகளும் அடுத்தடுத்து வெளியானதால் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு ஜனவரி 19 முதல் தொடங்கவிருந்த திருப்புதல் தேர்வுகள் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில், திட்டமிட்டபடி 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 19ஆம் தேதியும், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 20ஆம் தேதியும் முதல்கட்ட திருப்புதல் தேர்வுகள் தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.