டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் கடலோர மாவட்டங்களில் அடுத்த இரு தினங்களுக்கு லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
ஜன. 11 ஆம் தேதி டெல்டா மாவட்டங்கள், தென் தமிழக கடலோர மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
ஜன. 12ல் தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
அதுபோல ஜனவரி 13 ஆம் தேதி உள் மாவட்டங்களிலும் ஜன. 14, 15 தேதிகளில் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.
ஜனவரி 11ல் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இடி மாலையுடன் கூடிய சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.