கரும்புக்கான ஆதார விலையை டன் ஒன்றுக்கு ரூ.4,000 உயர்த்தி தருக: ஓபிஎஸ் வலியுறுத்தல்

தேர்தல் வாக்குறுதிப்படி கரும்புக்கு ஆதார விலை டன் ஒன்றுக்கு ரூ.4,000 உயர்த்தி வழங்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். 
கரும்புக்கான ஆதார விலையை டன் ஒன்றுக்கு ரூ.4,000 உயர்த்தி தருக: ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: தேர்தல் வாக்குறுதிப்படி கரும்புக்கு ஆதார விலை டன் ஒன்றுக்கு ரூ.4,000 உயர்த்தி வழங்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் "கரும்புக்கு ஆதார விலை டன் ஒன்றுக்கு ரூ.4,000 உயர்த்தி வழங்கப்படும்" என்று தலைப்புச் செய்தியாக கொடுக்கப்பட்டது. ஆனால் மூன்று நாள்களுக்கு முன்பு திமுக அரசால் வெளியிடப்பட்ட செய்தியில் கரும்புக்கு டன்னுக்கு ரூ.2,900 வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது கரும்பு விவசாயிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

கரும்புக்கான நியாயமான மற்றும் ஆதாரய விலையை ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு நிர்ணயித்து வருகிறது. இந்த வகையில், அதிமுக ஆட்சியில் 2016-2017 ஆம் ஆண்டு கரும்பு பருவத்திற்கு நியாயமான மற்றும் ஆதாய விலை டன் ஒன்றுக்கு ரூ.2,300 மத்திய அரசால் நிர்ணயம் செய்யப்பட்டது. அதே சமயத்தில் அண்டை மாநிலமான கர்நாடகத்தில் பெரும்பாலான சர்க்கரை ஆலைகள் டன் ஒன்றுக்கு ரூ.2,600 வழங்கியதையும், மகாராஷ்டிரத்தில் ரூ.2,475 வழங்கியதையும் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் கரும்பு விவசாயிகளின் நலனைக் காக்கும் வகையில், மத்திய அரசின் நியாயமான மற்றும் ஆதாய விலையான கரும்புக்கு டன் ஒன்றுக்கு கூ.2,300 என்ற விலையுடன் மாநில அரசின் பரிந்துரை விலையாக போக்குவரத்துச் செலவு ரூ.100 உள்பட ரூ.550 சேர்க்கப்பட்டு, ஒரு டன் கரும்பின் விலை ரூ.2,850 என நிர்ணயம் செய்யப்பட்டது. 

அந்த சமயத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் விவசாயிகளுக்கு கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.3,500 கேட்கிறார்கள் எனச் சுட்டிக்காட்டி, விவசாயிகளின் கோரிக்கை ஏற்கப்படவில்லை என்றால், அதனை எதிர்த்து திமுக போராட்டம் நடத்தும் என்று அறிவித்ததையும், திமுக தேர்தல் அறிக்கையில் கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.4,000 வழங்கப்படும் வாக்குறுதி கொடுக்கப்பட்டத்தையும் இந்த தருணத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 

ஆனால், தற்போது விவசாயிகள் கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.5,000 வழங்க வேண்டும் என்று கூறி வரும் நிலையில், 2020-21 ஆம் ஆண்டு அரவைப் பருவத்திற்கு மத்திய அரசு நிர்ணயித்த விலையான கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.2,707.50 காசு என்பதுடன் உற்பத்தி ஊக்கத் தொகையாக ரூ.42.50 காசு மற்றும் சிறப்பு ஊக்கத் தொகையாக ரூ.150 என மொத்த ரூ.192.50 காசு தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் என்றும், இதன் மூலம் கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.2,900 கிடைக்கும் என்று தமிழ்நாடு அரசு 08.01.2022 தேதி செய்தி வெளியீட்டின் மூலம் அறிவித்துள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.3,500 அளிக்கப்பட வேண்டும் என்று குரல் கொடுத்தவர், திமுக ஆட்சிக்கு வந்தால் கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.4,900 வழங்கப்படும் என்று 8 மாதங்களுக்கு முன்பு தேர்தல் அறிக்கை மூலம் வாக்குறுதி அளித்தவர், இப்போது ஆட்சிக்கு வந்தபிறகு ரூ.2,900 என்று   அறிவிப்பது என்பது கரும்பு விவசாயிகளை வஞ்சிக்கும் செயல் ஆகும். 

சொல்வது ஒன்று, செய்வது ஒன்று என்ற அளவில் திமுகவின் செயல்பாடு இருக்கிறது. இதற்கு அதிமுக சார்பில் கடும் கண்டணத்தை தெரிவித்துக் கொள்கிறேன். 

எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது சொன்னதையும். முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு செய்வதையும் ஒப்பிட்டு, அதனை அரசுக்குச் சுட்டிக்காட்டி நினைவுப்படுத்துவதும், அதனை நிறைவேற்ற வலியுறுத்துவதும் எதிர்க்கட்சியின் கடமை என்ற அடிப்படையில் முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு இதைக் கொண்டு வருகிறேன். 

முதல்வர் ஸ்டாலின் இதில் உடனடியாக தலையிட்டு, குறைந்தபட்சம் தேர்தல் வாக்குறுதியான கரும்புக்கு ஆதார விலையாக டன் ஒன்றுக்கு ரூ.4,000 வழங்கப்படும் என்பதையாவது நிறைவேற்ற வழிவகை செய்ய வேண்டும் என்று கரும்பு விவசாயிகளின் சார்பாகவும், அதிமுக சார்பாகவும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என ஒ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com