எடப்பாடி: வைகுந்த ஏகாதசியை முன்னிட்டு எடப்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பெருமாள் ஆலயங்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
எடப்பாடி முகரை நரசிம்ம பெருமாள் ஆலயத்தில் வியாழன் அன்று அதிகாலை கணபதி ஹோமத்துடன் தொடங்கிய சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில், பல்வேறு யாக வேள்விகள் தொடர்ந்து, கோ பூஜை நடைபெற்றது.
தொடர்ந்து அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத நரசிம்ம பெருமாள் சொர்க்கவாசல் என்றழைக்கப்படும் பரமபத வாயில் வழியாக பிரவேசம் செய்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
சொர்க்கவாசல் வழியாக வந்த பெருமாளை கோவிந்தா..... கோவிந்தா ..... என முழக்கமிட்டு பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின்னர் பரமபத வாசலின் மேற்கூரையில் உள்ள பல்லி உருவங்களை வணங்கிய பக்தர்கள் பரமபத வாயில் வழியாக வந்து சுவாமி தரிசனம் செய்தனர். வைகுண்ட ஏகாதசி திதியையொட்டி சிறப்பு மலர் அலங்காரத்தில் காட்சியளித்த மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதையும் படிக்க.. பூஸ்டர் தடுப்பூசி பெயரில் புதிய மோசடி: மக்களே எச்சரிக்கை
பழைய எடப்பாடி சென்றாய பெருமாள் ஆலயம், வெள்ளை கரடு திம்மராய பெருமாள் கோயில், பூலாம்பட்டியை அடுத்துள்ள கூடக் கல் மலைமீது அமைந்துள்ள மாட்டுப்பெருமாள் கோயில் உள்ளிட்ட பல்வேறு பெருமாள் ஆலயங்களில் இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.