காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வியாழக்கிழமை உற்சவர் தேவராஜ சுவாமி ரத்ன அங்கி சேவையில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்றதும், அத்திவரதர் பெருவிழா புகழ் பெற்றதுமானது காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜப் பெருமாள் திருக்கோயில். இங்கு ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் வைகுண்ட ஏகாதசித் திருநாளன்று மட்டும் உற்சவர் தேவராஜசுவாமி ரத்ன அங்கியில் பக்தர்களுக்கு காட்சியளிப்பது வழக்கமாக இருந்து வருகிறது. மார்கழி மாத வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாள் அத்திகிரி மலையிலிருந்து ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவர் தேவராஜ சுவாமி ரத்ன அங்கி சேவையில் கோயில் வளாகத்தில் உள்ள கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளினார். ரத்ன அங்கி சேவையில் உற்சவர் தேவராஜசுவாமியையும்,பெருந்தேவித்தாயாரையும் பக்தர்கள் பலரும் தரிசனம் செய்தனர்.
முன்னதாக பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடந்தன. கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆலயத்துக்குள் பக்தர்கள் அதிகமாக அனுமதிக்கப்படவில்லை.