ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் வைகுந்த ஏகாதசியையொட்டி சொர்க்க வாசல் வியாழக்கிழமை காலை திறக்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலானது 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும். இக்கோவிலில் மார்கழி உற்சவமானது கடந்த 3ஆம் தேதி பச்சை பார்த்தல் நிகழ்ச்சியுடன் மார்கழி உற்சவ திருவிழா ஆரம்பமானது.
தொடர்ந்து அன்று முதல் பகல்பத்து உற்சவம் நடைபெற்று வந்த நிலையில் பகல்பத்து உற்சவம் புதன்கிழமை நிறைவு பெற்றது. இராப்பத்து உற்சவம் வியாழக்கிழமை ஆரம்பமான நிலையில் வைகுந்த ஏகாதசியையொட்டி பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
முன்னதாக அதிகாலை 4.30 மணியளவில் ஆண்டாள், ரங்கமன்னாருக்கு சிறப்பு பூஜைகள செய்யப்பட்டது. தொடர்ந்து காலை 7.35 மணிக்கு பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக ஆழ்வார்கள் எதிர்கொள்ள முதலில் பெரியபெருமாள் பின்பு ஸ்ரீஆண்டாள் ஸ்ரீ ரெங்கமன்னார் வெளியே வந்தனர்.
இந்நிலையில், கரோனா நோய் தொற்று பரவலை, கட்டுப்படுத்தும் விதமாக வியாழக்கிழமை காலை 4 மணி முதல் 8 மணி வரை பக்தர்கள் யாருக்கும் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படவில்லை. இருந்தாலும் ஏராளமான பக்தர்கள் வெளியிலிருந்து ஆண்டாள் ரங்கமன்னார் தரிசித்தனர்
பின்பு 8 மணிக்கு மேல் பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு சாமி தரிசனம் செய்த பக்தர்கள் அனைவரும் 8 மணிக்கு மேல் சொர்க்கவாசல் வழியாக வெளியே வந்தனர்.
இந்நிகழ்ச்சியில் ஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீ சடகோபராமானுஜ ஜீயர், இந்து அறநிலையத்துறை உதவி ஆணையாளர் கருணாகரன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், தக்கார் ரவிச்சந்திரன் நகராட்சி ஆணையாளர் மல்லிகா, கோயில் ஆய்வாளர் பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை ஆண்டாள் கோவில் செயல் அலுவலர் இளங்கோவன் கண்காணிப்பாளர் வசந்தாள், பட்டர்கள், ஊழியர்களும் செய்திருந்தனர்.