திருஇந்தளுர் பரிமளரெங்கநாதர் ஆலய சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. பெருமாள் தங்க ரத்தின அங்கியில் எழுந்தருளினார். பக்தர்கள் அனுமதி இன்றி நிகழ்ச்சி நடைபெற்றது.
மயிலாடுதுறை திருஇந்தளுரில் அமைந்துள்ள பரிமளரெங்கநாதர் ஆலயம், பெருமாள் பள்ளிகொண்ட நிலையில் அருள்புரியும் ஸ்ரீரெங்கம் உள்ளிட்ட பஞ்ச அரங்க ஆலயங்களில் ஐந்தாவது ஆலயமாகும். திருமங்கையாழ்வார் உள்ளிட்ட ஆழ்வார்களால் பாடல்பெற்ற 1,500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த ஆலயம், சந்திரனின் சாபம் தீர்த்ததும், 108 வைணவ திவ்ய தேசங்களில் 22-வதுமான இந்த ஆலயத்தில் வைகுந்த ஏகாதேசியை முன்னிட்டு, இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையும் படிக்க.. பூஸ்டர் தடுப்பூசி பெயரில் புதிய மோசடி: மக்களே எச்சரிக்கை
இதை முன்னிட்டு பெருமாள் தங்க ரெத்தின அங்கியில் எழுந்தருளினார். தொடர்ந்து சிறப்பு ஆராதனைகளுக்குப்பின், பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, பெருமாள் வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளினார். அப்போது கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
தொடர்ந்து, கோயிலின் வாசலில் நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் காலை 6 மணிக்கு மேல் கோயிலுக்குள் வழிபாட்டுக்காக அனுமதிக்கப்பட்டனர்.