திருப்பூரில் தளர்வுகளற்ற பொதுமுடக்கத்தால் வெறிச்சோடியது மாநகரம்

திருப்பூரில் தளர்வுகளற்ற பொதுமுடக்கம் காரணமாக மாநகரில் உள்ள அனைத்து சாலைகளும் ஞாயிற்றுக்கிழமை வெறிச்சோடியது.
திருப்பூர் பழைய பேருந்து நிலையம் மேம்பாலம்
திருப்பூர் பழைய பேருந்து நிலையம் மேம்பாலம்

திருப்பூர்: திருப்பூரில் தளர்வுகளற்ற பொதுமுடக்கம் காரணமாக மாநகரில் உள்ள அனைத்து சாலைகளும் ஞாயிற்றுக்கிழமை வெறிச்சோடியது.

தமிழகத்தில் கரோனா பரவலின் 3 ஆவது அலையைக் கட்டுப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு நடவடிக்கையாக, இரவு நேர பொதுமுடக்கம் மற்றும் ஞாயிற்றுக்கிழமைதோறும் தளர்வுகளற்ற பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என்று ஏற்கெனவே அறிவித்திருந்தது.

திருப்பூர் புதிய பேருந்து நிலையம்
திருப்பூர் புதிய பேருந்து நிலையம்

இதைத்தொடர்ந்து, திருப்பூர் மாநகரின் முக்கிய சாலைகள் அனைத்தும் வாகனப்போக்குவரத்து இல்லாமல் வெறிச்சோடிக் காணப்பட்டது. திருப்பூர் சிடிசி கார்னர், பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், குமரன் சாலை, புதுமார்க்கெட் வீதி, புஷ்பா ரவுண்டானா, அவிநாசி சாலை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. திருப்பூர் மாநகரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினரும் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

திருப்பூர் புஷ்பா ரவுண்டானா சந்திப்பு
திருப்பூர் புஷ்பா ரவுண்டானா சந்திப்பு



அத்தியாவசியப் பணிகள் இல்லாமல் வெளியில் சுற்றும் வாகன ஓட்டிகளின் மீது வழக்குப்பதிவு செய்வதுடன், அபராதமும் விதித்து வருகின்றனர். அதே வேளையில், பால் விநியோகம், மருந்தகங்கள், பெட்ரோல் நிலையங்கள், பத்திரிகை விநியோகம் ஆகியவை வழக்கம்போல் செயல்பட்டது. திருப்பூர் பழைய பேருந்து நிலையம், குமரன் மகளிர் கல்லூரி, அம்மாபாளையம்,காசிபாளையம், கோவில்வழி ஆகிய பகுதிகளில் காவல் துறையினர் தீவிர வாகனச்சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

திருப்பூர் பழைய பேருந்து நிலையம் மேம்பாலம்
திருப்பூர் பழைய பேருந்து நிலையம் மேம்பாலம்

ரயில் நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்

பிகார், ஒடிஸா, ஜார்கண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ரயில் மூலமாக திருப்பூர் வருகின்றனர். இந்தத் தொழிலாளர்கள் அனைவரும் திருப்பூர் ரயில் நிலையத்தில் கரோனா பரிசோதனைக்குப் பின்னர் வெளியில் அனுமதிக்கப்படுகின்றனர். அவ்வாறு வரும் பயணிகள் சனிக்கிழமை இரவு முதல் பேருந்து வசதிகள் இல்லாததால் ரயில் நிலையத்தின் முன்புறம் குடும்பத்துடன் தங்கியுள்ளனர். அதே போல, வெளி மாநிலங்களுக்குச் செல்லும் பயணிகளும் ரயில் நிலையத்தில் அதிக அளவில் குவிந்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com