தமிழகத்தில் ஜனவரி 1ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் கரோனா பாதித்த 191 பேர் பலியாகியுள்ளனர்.
இவர்களில் 68.5 சதவீதம் பேர் அதாவது 191-ல் 131 பேர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் அல்லது ஒரு தவணை தடுப்பூசி மட்டும் செலுத்திக் கொண்டவர்கள் என்று தெரிய வந்திருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை இயக்குநர் டாக்டர் டி.எஸ். செல்வவிநாயகர் தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமையன்று கரோனா பாதித்தவர்களில் 22 பேர் பலியான நிலையில், புதிதாக 23,975 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.
இதன் மூலம் தமிழகத்தில் கரோனா பாதித்து சிகிச்சையிலிருப்பவர்களின் எண்ணிக்கை 1,42,476 ஆக உயர்ந்துள்ளது. இதில் சென்னையில் மட்டும் 57,591 ஆக உள்ளது.
இதையும் படிக்க.. சென்னையின் கரோனா பரவுவதில் ஏற்பட்ட மாற்றம்: காரணம் இதுதான்!
சென்னையில் மட்டும் புதிதாக 8,987 பேருக்கு புதிதாக பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 2,701 ஆகவும், திருவள்ளூரில் 1,273 பேருக்கும் காஞ்சிபுரத்தில் 831 பேருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஒட்டுமொத்த புதிய பாதிப்பில் சென்னையில் மட்டும் 57.5 சதவீதம் உள்ளது. இந்த மாவட்டங்களைத் தவிர்த்துப் பார்த்தால் கோவை மட்டும்தான் 1,866 பாதிப்புகளுடன் நான்கு இலக்க எண்களில் கரோனா பதிவாகும் மாவட்டமாக உள்ளது.
இந்த நிலையில், மக்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தும் செல்வவிநாயகம், அதாவது 85.3 சதவீத பலி (163 பேர்) 50 வயதுக்கு மேற்பட்டவர்கள்.
மேலும் பலியானவர்களில் 181 பேர் இணைநோய் இருந்தவர்கள். மொத்தமாக உயிரிழந்த 191 பேரின் மருத்துவ விவரங்களை ஆராய்ந்ததில், கரோனா பாதித்த வயதான நோயாளிகள் 159 பேர். வயதான, இணை நோயிருக்கும் போது கரோனா பாதித்தால், அவர்களது இணைநோய்களை மருந்துகள் மூலம் கட்டுப்படுத்த இயலாமல் போகிறது.
அதேவேளையில், கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு எதிர்ப்பாற்றல் காணப்படுவதையும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது. ஆனால், இணை நோயிருப்பவர்களில் சிலருக்கு மட்டும் இது பாதுகாப்பை அளிப்பதில் தடுமாற்றத்தை அடைகிறது.
தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 62 சதவீத வயதானவர்கள் ஒரே தவணை தடுப்பூசி மட்டுமே செலுத்தியுள்ளனர். 48 சதவீதம் பேர் மட்டுமே இரண்டு தவணையும் செலுத்தியுள்ளனர்.
அதாவது, வயதான, இணை நோயிருக்கும் கரோனா நோயாளிகள், தடுப்பூசி செலுத்தாதபட்சத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது, குறிப்பாக பலியாகும் அபாயமும் உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.