தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 10 ஆம் வகுப்பு துணைத்தேர்வு எழுதிய தேர்வர்கள் வருகிற வெள்ளிக்கிழமை(ஜன.21) முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் கடந்த செப்டம்பரில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு எழுதிய தேர்வர்களுக்கு 19.11.2021 முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை தேர்வர்கள் தாங்களே ஆன்-லைன் மூலம் பதிவிறக்கம் செய்துக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது.
தற்போது, பத்தாம் வகுப்பு தேர்வெழுதிய தேர்வர்கள் தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழ்களை 21.01.2022 (வெள்ளிக்கிழமை) முதல், அவரவர் தேர்வெழுதிய தேர்வு மையங்களிலேயே பெற்றுக்கொள்ளலாம்.
இதில், நிரந்தர பதிவெண் கொண்ட தேர்வர்கள், இதற்கு முந்தைய பருவங்களில் அவர்கள் தேர்ச்சி பெறாத பாடங்களை செப்டம்பர் 2021 துணைத்தேர்வில் தேர்வெழுதி, அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருப்பின், அவர்களுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட அசல் மதிப்பெண் சான்றிதழ்களும், முழுமையாக தேர்ச்சி பெறாதவர்களுக்கு அவர்கள் தேர்வெழுதிய பாடங்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்களும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.