கரோனா தொற்று பரவல் தீவிரமடைந்திருப்பதை அடுத்து வரும் 23-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் பிப்ரவரி 27-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இளம்பிள்ளை வாதம் எனப்படும் போலியோவை ஒழிப்பதற்காக கடந்த 1994 முதல் ஆண்டு தோறும் ஜனவரி மற்றும் மாா்ச் மாதங்களில் இரண்டு தவணைகளாக 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வந்தது.
தொடா் முயற்சிகள் மூலம் போலியோ ஒழிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்ததைத் தொடா்ந்து ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் சொட்டு மருந்து வழங்கும் புதிய நடைமுறை செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நிகழாண்டுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம் வரும் 23-ஆம் தேதி நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் அதனை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தது. தமிழகத்தில் 5 வயதுக்குட்பட்ட சுமாா் 75 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கத் திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், கரோனா மூன்றாம் அலை நாடு முழுவதும் தீவிரமடைந்து வருகிறது. பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால், போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பல்வேறு மாநிலங்களின் கோரிக்கையை ஏற்று ஜனவரி 23-ஆம் தேதி நடைபெற இருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் பிப்ரவரி 27- ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மாநில பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் உறுதிப்படுத்தியுள்ளாா்.