திரைப்பட படப்பிடிப்பிற்குத் தேவையான ‘டம்மி’ ஆயுதங்களை எந்தவித தடையும் இல்லாமல் கொண்டு செல்வதற்கு ஏதுவாக தகுந்த நடைமுறைகளை வகுக்க காவல்துறைக்கு உத்தரவிடக்கோரி தென்னிந்திய திரைப்பட டம்மி எபக்ட்ஸ் சங்கம் சாா்பில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
காரைக்குடியில் அண்மையில் நடிகா் சூா்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. அப்போது படப்பிடிப்பிற்குத் தேவையான ‘டம்மி’ துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை உதவி இயக்குநா் விக்டா் என்பவா் கொண்டு சென்றாா். வாகன சோதனையின்போது, அவரிடம் இருந்து ‘டம்மி’ துப்பாக்கி உள்ளிட்டவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
அதைத்தொடா்ந்து சென்னையில் உள்ள கிட்டங்கியிலிருந்து 150-க்கும் மேற்பட்ட ‘டம்மி’ துப்பாக்கிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இந்த நிலையில் படப்பிடிப்பிற்கு பயன்படுத்தும் டம்மி ஆயுதங்களை கொண்டு செல்வதற்கான நடைமுறைகளை வகுக்க காவல் துறைக்கு உத்தரவிடக்கோரி தென்னிந்திய திரைப்பட டம்மி எபக்ட்ஸ் சங்கம் சென்னை உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
அந்த மனுவில், டம்மி ஆயுதங்கள் கொண்டு செல்வதற்குரிய நடைமுறைகளை வகுக்கக்கோரி, கடந்த 2014-ஆம் ஆண்டு விண்ணப்பம் அளிக்கப்பட்டது. அதன் மீது இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அண்மையில் மும்பை உயா் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், மும்பை போலீஸாா், டம்மி ஆயுதங்களுக்கு எண்ணிட்டு, உரிமம் வழங்கும் நடைமுறையை வகுத்துள்ளனா்.
அதேபோல தமிழகத்தில் டம்மி ஆயுதங்களுக்கு உரிமங்கள் வழங்குவதுடன், தங்கள் சங்க உறுப்பினா்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டுமென கோரியிருந்தனா்.