சீர்காழி சட்டைநாதர் கோவில் பாலாலயம் தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகாசந்நிதானம் முன்னிலையில் இன்று நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் சட்டை நாதர் கோவில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற இத்தலத்தில் சிவபெருமான் மூன்று நிலைகளில் அருள்பாலிக்கிறார். ஞானசம்பந்தர் அவதரித்த இத்தலத்தில் திருப்பணிகள் தொடங்க திட்டமிட்டு பாலாலயம் நடைபெற்றது.
இதனை முன்னிட்டு கோவிலில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டு பூர்ணாஹூதி, மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து புனித நீர் அடங்கிய கடம் புறப்பாடு நடைபெற்றது. யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் கொண்டு சட்டைநாதர், பிரம்மபுரீஸ்வரர், உள்ளிட்ட 31 சுவாமி அம்பாளுக்கு சோமாஸ்கந்தர் சன்னதியும் பாலாலயம் செய்யப்பட்டு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தருமையாதீனம் 27வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் பாலாலயம் நடைபெற்றது.
தென்மண்டல கட்டளை விசாரணை ஸ்ரீமத் திருஞானசம்பந்த தம்பிரான் சுவாமிகள், சீர்காழி கட்டளை விசாரணை ஸ்ரீமத் சொக்கலிங்கத் தம்பிரான் சுவாமிகள், மகாலட்சுமி சாரிடபிள் டிரஸ்ட் மகாலட்சுமி அம்மாள், தொழிலதிபர் மார்கோனி, லயன்ஸ் .கிருஷ்ணன், பள்ளி செயலர் முரளிதரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.