‘தவறு செய்ய துணைபுரிந்தால் யூடியூப்பும் குற்றவாளிதான்’: உயர்நீதிமன்றம்
ஒருவர் தவறு செய்வதற்கு துணைபுரிந்தால் சட்டப்படி யூடியூப்பும் குற்றவாளிதான் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
யூடியூப்பில் தேவையற்ற பதிவுகள் வெளிவருவது குறித்த வழக்கு மதுரை கிளை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த விசாரணையில் நீதிபதி புகழேந்தி பேசியதாவது:
யூடியூப்பை பார்த்து சாராயம் காய்ச்சுவது, துப்பாக்கிச் செய்வது போன்று பலர் சாட்சி தெரிவித்துள்ளனர். ஒருவர் தவறு செய்ய துணைபுரிந்தால் சட்டப்படி யூடியூப்பும் குற்றவாளிதான்.
யூடியூப்பில் வெடிகுண்டுகள் தயாரிப்பது போன்ற காணொலிகள் இடம்பெறும் நிலையில் இதை தடுக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன?
யூடியூப்பில் சில நல்ல விஷயங்கள் உள்ளன. இருப்பினும், இதுபோன்ற பதிவுகளை தடுக்க தடை செய்யலாமே? வெளி மாநிலங்களில் இருந்து தேவையற்ற பதிவுகள் வந்தால் அதை தடை செய்யுங்கள்.
தேவையற்ற பதிவுகளை தடுக்க அரசிடம் என்ன திட்டங்கள் உள்ளன? தடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் என்ன? என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க கோரி ஒரு வாரத்திற்கு வழக்கை ஒத்திவைத்தனர்.