சென்னை: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை விலகுவதற்கான சாதகமான சூழல் அமைந்திருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பில், தமிழகம், புதுச்சேரி, காரைக்கால், கேரளம் மற்றும் அதனை ஒட்டியிருக்கும் பகுதிகள், ஆந்திர கடற்கரையோர பகுதிகள், ஏனாம், ராயலசீமா மற்றும் கர்நாடகத்தின் தெற்கு உள் மாவட்டங்களில், ஜனவரி 22ஆம் தேதியுடன் வடகிழக்குப் பருவமழை விலகுவதற்கு சாதகமான சூழல் நிலவுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
வடகிழக்குப் பருவமழையானது கடந்த ஆண்டு தமிழகம் உள்ளிட்ட தென்னிந்தியப் பகுதிகளில் அக்டோபர் 25ஆம் தேதி தொடங்கியது. வழக்கமான மழை அளவை விடவும் பெரும்பாலான மாநிலங்களில் அதிகப்படியான மழைப்பொழிவை இந்த வடகிழக்குப் பருவமழை கொடுத்தது.
தமிழகத்துக்கு அதிக மழைப்பொழிவை கொடுக்கும் வடகிழக்குப் பருவமழை காலம் அக்டோபர் முதல் டிசம்பர் வரை ஆகும். ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கும். டிசம்பர் இறுதி வாரத்தில் நிறைவுபெறும். இந்த ஆண்டு ஜனவரி மாதம் மூன்றாவது வாரத்தில் வடகிழக்குப் பருவமழை நிறைவு பெற்றுள்ளது.