செங்கல்பட்டு அரசு மருத்துவமனை அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கொலை

செங்கல்பட்டு அரசு மருத்துவமனை அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தலையில் உருளை கல்லை தூக்கிப் போட்டு உடன் தங்கியிருந்த ஓட்டுநரே கொலை செய்தது அம்பலம் ஆனது. 
கிரைண்டர் உருளை கல்லை தலையில் தூக்கிபோட்டு கொலை செய்யப்பட்ட ஓட்டுநர் விஜயகுமார்.
கிரைண்டர் உருளை கல்லை தலையில் தூக்கிபோட்டு கொலை செய்யப்பட்ட ஓட்டுநர் விஜயகுமார்.

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவமனை அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தலையில் உருளை கல்லை தூக்கிப் போட்டு உடன் தங்கியிருந்த ஓட்டுநரே கொலை செய்தது அம்பலம் ஆனது. 

செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு கே.கே நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகரன் இவருடைய மகன் விஜயகுமார் (33). விஜயகுமார் தனியார் ஆம்புலன்ஸ் நிறுவனத்தில் ஓட்டுநராக கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறார்.

ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணிபுரிவதால் தன்னுடைய பணி காரணமாக, அதே நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றி வரும், அஜித், தர்மதுரை, ராஜா ஆகிய  நபர்களுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை எதிரே உள்ள பெரியார் நகர் பகுதியில் வாடகை வீடு எடுத்து தங்கி வருகிறார். 

ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணியாற்றி வரும் விஜயகுமார் தனது முதலாளியிடம் அஜித் மது அருந்திவிட்டு வருவதாகவும், சரியாக வேலை செய்வதில்லை என புகார் தெரிவித்து வந்ததுள்ளார். 

ஓட்டுநர் விஜயகுமாரை கொலை செய்த ஓட்டுநர் அஜித்

இதனால் அஜித்திற்கும் விஜயகுமாருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இதனால் இருவருக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது .

இந்நிலையில், சனிக்கிழமை வழக்கம்போல் அஜித், ராஜா மற்றும் விஜயகுமார் ஆகியோர் ஒன்றாக வாடகை வீட்டில் தங்கி உள்ளனர். அப்பொழுது இரவு ஒரு மணி அளவில் ஆம்புலன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சரவணன், அஜித்திற்கு போன் செய்து, ஃப்ரீசர் பாக்ஸ் எடுத்துச் சென்று நெம்மேலி அருகே உள்ள புல்லேரி கிராமத்தில் வைத்து வரும்படி கூறியுள்ளார்.

விடியல் காலை அஜித் திரும்பி வந்து பார்த்தபோது, ரத்தவெள்ளத்தில் அடிபட்டு விஜயகுமார் இருந்துள்ளார். உயிரிழந்த விஜயகுமார் அருகில் போதையில் ராஜா உறங்கிக் கொண்டு இருப்பதாக ஆம்புலன்ஸ் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து தகவல் அறிந்த செங்கல்பட்டு நகர காவல் துறை ஆய்வாளர் வடிவேல் முருகன், உதவி ஆய்வாளர் டில்லி பாபு உள்ளிட்ட  போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொலையுண்ட விஜயகுமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து செங்கல்பட்டு நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து ராஜா, அஜித், தர்மதுரை ஆகிய மூன்று பேரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக, சனிக்கிழமை இரவு விஜயகுமாரிடம் அஜித் தகராறில் ஈடுபட்டுள்ளார். தகராறு முடிந்து படுத்துள்ளனர்.

ஆத்திரம் அடங்காத நிலை இருந்த அஜீத் வீட்டிற்கு வெளியே இருந்த கிரைண்டர் உருளை கல்லை தலையில் தூக்கிபோட்டு விஜயகுமாரை கொலை செய்துவிட்டு, தனக்கு எதுவும் தெரியாதது போல் நாடகமாடியது தெரியவந்தது. 

இந்த கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் தற்போது காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com