முழு ஊரடங்கினையொட்டி சேலம் மாவட்டம், சங்ககிரியில் பல்வேறு பிரதான சாலைகள் வாகனங்கள் செல்லாமல் ஞாயிற்றுக்கிழமை வெறிச்சோடியது.
முழு ஊரடங்கினையொட்டி சங்ககிரி நகர் பகுதிகளில் வணிக நிறுவனங்கள், தேநீர் கடைகள், மளிகை கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகள், மருந்தகங்கள் மட்டும் இயங்கின.
மேலும் தனியார் உணவு விடுதிகள், ஆவின், தனியார் பாலகங்கள் பொதுமக்கள் சேவைக்காக திறந்து வைக்கப்பட்டிருந்தன. இறைச்சி கடைகள் தனியார் உணவகங்களுக்காக முன் பகுதி அடைக்கப்பட்டு பின்பகுதி திறந்து வைக்கப்பட்டு விற்பனை நடைபெற்றது.
இரு சக்கரவாகனங்களில் தேவையில்லாமல் வந்தவர்களிடம் சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகே போக்குவரத்து காவல்துறையினர் வாகனத் தணிக்கை செய்தனர். அவசியமில்லாமல் வெளியே சுற்றியவர்கள் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரு சில சரக்கு வாகனங்கள், தனியார் நூற்பாலை வாகனங்கள் மிக குறைந்த அளவில் இயக்கப்பட்டன. அதனையடுத்து சங்ககிரியிலிருந்து சேலம், ஈரோடு, பவானி, கோவை, எடப்பாடி, திருச்செங்கோடு, ஓமலூர் செல்லும் முக்கிய பிரதான சாலைகள் அனைத்தும் வாகனங்களின்றி வெறிச்சோடி காணப்பட்டது.