நேற்று முழுஊரடங்கு நாளில் கரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறியது தொடர்பாக 381 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 492 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக சென்னை மாநகராட்சி காவல்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, தமிழக அரசு 06.01.2022 முதல் 31.01.2022 வரை வார நாட்களில் இரவு 10.00 மணி முதல் அதிகாலை 05.00 மணி வரையில் இரவு நேர முழு ஊரடங்கும், ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தியுள்ளது.
அதன்படி, நேற்று(ஜன.23) முழு ஊரடங்கு நாளையொட்டி, சென்னை மாநகராட்சியில் 10,000 காவல் அதிகாரிகள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
முழு ஊரடங்கில் கரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகள் மீறியது தொடர்பாக 381 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அத்தியாவசியத் தேவையின்றி வெளியே சுற்றிய 443 இருசக்கர வாகனங்கள், 31ஆட்டோக்கள் 15 இலகுரக வாகனங்கள் மற்றும் 3 இதர வாகனங்கள் என மொத்தம் 492 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
முகக்கவசம் அணியாதது தொடர்பாக 2,678 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ. 5,94,100/- அபராதமும், சமூக இடைவெளி கடைபிடிக்காதது தொடர்பாக 64 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ. 32,000/- அபராதமும் வசூலிக்கப்பட்டதாக சென்னை மாநகர காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.