அமராவதி ஆற்றில் மூழ்கி பலியான 6 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திண்டுக்கல் மாவட்டம் மாம்பறை பகுதியில் உள்ள முனீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பி வந்து கொண்டிருக்கையில் தாராபுரம் அமராவதி ஆற்றின் புதுப்பாலம் பகுதியில் வரும் போது, வாகனத்தை நிறுத்திவிட்டு அமராவதி ஆற்றில் இறங்கி குளித்து, அதில் 6 சிறுவர்கள் உயிரிழந்தனர் என்பதும் ,அதற்கு காரணம் திருட்டு மணல் அள்ளப்பட்டது தான் என்றும், அப்பகுதி மக்கள் தெரிவிப்பதும் என்னை மிகுந்த மன வேதனையில் ஆழ்த்தியுள்ளது. உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த மாதம் 17ஆம் தேதி திருப்பூர் இடுவாய் கிராமம் அண்ணாமலை கார்டன் பகுதியை சேர்ந்த திருவாளர்கள் அமிர்த கிருஷ்ணன், ஸ்ரீதர் ,யுவன், மோகன், சக்கர வர்மன், ரஞ்சித் ,ஜீவா மற்றும் சிவன் ஆகிய எட்டுபேர் கோவிலுக்கு சென்று விட்டு திரும்பும் வழியில் அமராவதி ஆற்றில் இறங்கி குளித்ததாகும் இவர்களில் திருவாளர்கள் ஜீவா மற்றும் சரன் தவிர எஞ்சிய ஆறு பேரும் ஆற்றில் மூழ்கி பலியாகி விட்டதாகவும், இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினர் ,சம்பவ இடத்திற்கு சென்று தண்ணீரில் மூழ்கிய 6 பேரின் உடல்களை மீட்டு எடுத்து பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாகவும், அவர்களை காப்பாற்ற முயன்று படுகாயமுற்ற திருவாளர்கள் ஜீவா மற்றும் சரண் தீயணைப்பு வீரர்கள் மீட்கப்பட்டு அவர்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், இந்த விபத்திற்கு காரணம் சம்பவம் நடந்த பகுதியில் எச்சரிக்கை பலகை எதுவும் வைக்கப்படவில்லை என்றும் , பத்திரிகைகளில் செய்திகள் வந்தன. ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவமனைக்கு சென்று ஆறுதல் கூறியதாகவும், முதல்வர் நிவாரண உதவி கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு வருவாய் துறையினருக்கு அறிவுரை வழங்கியதாக செய்திகள் வந்தன ,ஆனால் இதுவரை எந்தவித நிவாரண உதவியும் வழங்கப்பட்டதாக தெரியவில்லை.
இதையும் படிக்க- ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு
இந்தச் சூழ்நிலையில் விபத்திற்கு வேறுவிதமான காரணங்களை பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சார்ந்தவர்களும், அப்பகுதி மக்களும் தெரிவிக்கின்றனர். அதாவது, அண்மையில் அமராவதி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்படுவதற்கு முன்பு மாணவர்கள் குறித்த பகுதியில் முழங்கால் அளவுக்குத்தான் தண்ணீர் இருந்ததாகவும், ஆழமான பகுதியாக அது இல்லை என்றும், தண்ணீர் குறைவாக இருந்த சமயத்தில் சுமார் இருபது அடி ஆழத்திற்கு திருட்டு மணல் அள்ளப்பட்டு கடத்தப்பட்டதாகவும், பின்னர் ஆற்றிற்கு தண்ணீர் திறந்தவிடப்பட்டவுடன் அந்தப் பகுதி ஆழமான பகுதியாகவிட்டதாகவும், இந்த மணல் திருட்டுதான் அப்பாவி மாணவர்களின் உயிரிழப்புக் காரணம் என்றும், இதனை மூடி மறைக்கும் பணியில் ஆளும் கட்சியினரும், அரசு நிர்வாகமும் ஈடுபடுவதாகவும் தகவல்கள் வருகின்றன.
மாணவர்களின் உயிரிழப்புக்கு திருட்டு மணல் அள்ளப்பட்டது, அதனை அரசு நிர்வாகம் வேடிக்கை பார்ப்பதும் தான் காரணம் என்பதாலும், உயிரிழந்தவர்களை சேர்ந்த அனைத்து குடும்பங்களும் மிக ஏழ்மை நிலையில் உள்ளதாகவும் ,முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து 25 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்க படவேண்டும் என்பதும் , குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்க படவேண்டும் என்பதும் பாதிக்கப்பட்டோரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது . அனைத்து குடும்பங்களும் பிள்ளைகளைப் பறிகொடுத்து விட்டு தவித்துக் கொண்டிருக்கின்றனர்.
எனவே தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இதில் தனிக்கவனம் செலுத்தி, இளம் பிள்ளைகள் உயிரிழப்புக்கு காரணமான திருட்டு மணல் அள்ளப்பட்டது குறித்து ,தீவிர விசாரித்து தவறு இழைத்தோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் , உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 25 லட்சம் ரூபாய் நிவாரண உதவி மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கவும் நடவடிக்கை எடுக்குமாறு அதிமுக சார்பில் கேட்டுக்கொள்கிறேன்" இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.