தஞ்சாவூர்: மாணவி இறப்பு தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட விடியோ பதிவு உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தஞ்சாவூர் வல்லம் காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஒப்படைக்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த 17 மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையத்தினர் வழக்குப்பதிந்து லாவண்யாவை அதிக வேலை வாங்கி மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக விடுதிக் காப்பாளர் சகாயமேரியை கைது செய்தனர்.
ஆனால், விடுதிக் காப்பாளர் உள்ளிட்டோர் மதம் மாறுமாறு வற்புறுத்தியதால் மாணவி தற்கொலை செய்து கொண்டார் என பெற்றோர் புகார் எழுப்பினர். இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மாணவியின் தந்தை முருகானந்தம் மனுத் தாக்கல் செய்தார்.
இதை விசாரித்த நீதிமன்றம் தஞ்சாவூர் மாவட்ட நீதிபதியால் நியமிக்கப்படும் குற்றவியல் நீதித்துறை நடுவர் முன் பெற்றோர் ஆஜராகி தங்களது வாக்குமூலத்தைத் தெரிவிக்கலாம் என உத்தரவிட்டது.
இதன்படி, தஞ்சாவூர் மூன்றாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் சி. பாரதி முன்னிலையில் மாணவியின் தந்தை முருகானந்தம், சித்தி சரண்யா ஞாயிற்றுக்கிழமை ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.
இந்த வாக்குமூல அறிக்கை உயர்நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஒப்படைக்கப்பட்டது. அப்போது, லாவண்யா பேசியதாகக் கூறப்படும் வீடியோ பதிவை தஞ்சாவூர் வல்லம் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன்படி, வீடியோ பதிவு கொண்ட கைப்பேசியைத் தஞ்சாவூர் வல்லம் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆர். பிருந்தாவிடம் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் அரியலூர் மாவட்டச் செயலர் பி. முத்துவேல் செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஒப்படைத்தார்.
பின்னர் வெளியே வந்த முத்துவேல் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:
குடும்ப நண்பர் என்ற அடிப்படையில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவியைப் பார்ப்பதற்காக ஜனவரி 17 ஆம் தேதி சென்றேன். பெற்றோர் கூறியதன் அடிப்படையில் மாணவி பேசியதைக் கைப்பேசியில் பதிவு செய்தேன். உயர் நீதிமன்ற உத்தரவுப்படி கைபேசியை தஞ்சாவூர் வல்லம் காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒப்படைத்தேன் என்றார்.