மதுரை: ஆளில்லா வான்வழி வாகனக் கழகம், சூரிய மின்சக்தி மையம் - திறந்துவைத்தார் முதல்வர்

தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகனக் கழகத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
மதுரையில் சூரிய மின்சக்தி மையம் திறப்பு
மதுரையில் சூரிய மின்சக்தி மையம் திறப்பு

ரூ.10 கோடி மதிப்பீட்டில் புதிதாக  தோற்றுவிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகனக் கழகத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ரூ.7.25 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சூரிய மின்சக்தி மையத்தை திறந்து வைத்தார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (25.1.2022) சென்னை, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், உயர்கல்வித் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அண்ணா பல்கலைக்கழகத்தின் சென்னை தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தோற்றுவிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகனக் கழகத்தினை தொடங்கி வைத்தார்.

உயர்கல்வியினை அனைவரும் பெறும் வகையிலும், சமத்துவம் மற்றும் சமூகநீதிக்கு உட்பட்டு அனைத்து பிரிவினரையும் கல்வியின் எல்லைக்குள் கொண்டுவரும் வகையிலும், கொள்கைகள் வகுக்கப்பட்டு, தமிழ்நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. அகில இந்திய அளவில் உயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதலிடம் வகித்து வருகிறது. தமிழக அரசின் கல்வி குறித்த பல்வேறு சிறப்பான முன்னெடுப்புகளும், பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித் துறையின் சிறப்பான செயல்பாடுகளும் இதற்குக் காரணம். 

2021-2022ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், “மற்றுமொரு புதிய முன்மாதிரி முயற்சியாக, ஆளில்லா விமானங்களுக்கென தமிழ்நாடு ஆளில்லா விமானக் கழகம், அண்ணா பல்கலைக்கழக சென்னை தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து துவக்கப்படும் என்றும், இந்நிறுவனம், தமிழ்நாடு மட்டுமல்லாது, பிற மாநிலங்களிலும் உள்ள அரசு சார்ந்த முகமைகள் ஆளில்லா  விமானங்களைப் பயன்படுத்துவதில் உறுதுணையாக இருக்கும்” என்றும் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, ஆளில்லா விமானங்களை, பேரிடர் மேலாண்மை, விவசாயம், கட்டுமான கண்காணிப்பு, வரி திட்டமிடல், சுகாதாரம், வானவியல் மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வுகள் போன்ற அரசு துறைகளின் பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்துவதற்காக சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தின் சென்னை தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகனக் கழகம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தின் சென்னை தொழில்நுட்ப நிறுவன வளாகத்தில் உள்ள டாக்டர் கலாம் மேம்பட்ட ஆளில்லா விமான ஆராய்ச்சி மையமானது சமூக பயன்பாடுகளுக்கான ஆளில்லா விமான வடிவமைப்பு மற்றும் மேம்பாடு குறித்த திட்டத்தை முன்னெடுத்து வருகிறது.

மேலும், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் 7 கோடியே 25 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 1 மெகாவாட் சூரிய மின்சக்தி மையத்தையும் தமிழக முதல்வர் இன்று திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, சென்னை, தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில் பணிபுரிந்து பணிக்காலத்தில் காலமான 21 பணியாளர்களின் வாரிசுதாரர்கள் மற்றும் கல்லூரிக் கல்வி இயக்ககத்தில் பணிபுரிந்து பணிக்காலத்தில் காலமான 15 பணியாளர்களின் வாரிசுதாரர்கள், என மொத்தம் 36 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக முதல்வர், 4 வாரிசுதாரர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

பின்னர், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆளில்லா வான்வழி வாகனக் கண்காட்சியை பார்வையிட்டார். மேலும், ஆளில்லா வான்வழி வாகனத்தின் செயல்பாடுகள் குறித்த விவரங்களையும் முதல்வர் கேட்டறிந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com