சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை 108 ஆம்புலன்ஸ்கள், தனியார் மருத்துமவமனைகளுக்கு கொண்டு செல்வதாக எழுந்த புகார் குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மோட்டார் வாகன விபத்து தொடர்பாக போலி காப்பீடு கோரிய விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2021ல் உத்தரவிட்டது. இந்த வழக்கின் விசாரணை இன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக மீண்டும் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கின் விசாரணையின்போது, சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களை 108 ஆம்புலன்ஸ்கள், அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லாமல் தனியார் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்வதாக வழக்கறிஞர் விஜயராகவன் நீதிபதியிடம் புகார் தெரிவித்தார்.
இதையடுத்து, காப்பீடு மோசடி குறித்து விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு குழு, 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு எதிரான புகார் குறித்தும் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், காப்பீடு மோசடி வழக்கில், ஓசூரில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் தீர்ப்பாயத்தில் 11 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான 84 வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுள்ளதாகவும் அதுகுறித்து விசாரிப்பதுடன், தமிழ்நாடு மாநில சட்டபணிகள் ஆணையக் குழுவும் இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.