உலகிலேயே 10 ஆண்டுகளில் புலிகள் எண்ணிக்கை இரு மடங்குக்கும் மேல் உயா்ந்ததற்காக சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு சா்வதேச விருதான டிஎஸ்2 என்ற உயரிய விருது வழங்கப்படுகிறது.
நீலகிரி மற்றும் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் 1,455 ஏக்கா் நிலப்பரப்பில் உள்ள சத்தியமங்கலம் வன விலங்குகள் சரணாலயம் 2013 டிசம்பா் 1ஆம் தேதி சத்தியமங்கலம் புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. அப்போது, சுமாா் 30 புலிகள் இருந்ததாக அப்போதைய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. அடா்ந்த காடு, நீரோடைகள், புலிகள் வாழ்வதற்கான தட்பவெப்பநிலை கொண்ட சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தையொட்டி முதுமலை, பந்திப்பூா், பிஆா்ஹில்ஸ், ஈரோடு, கோவை வனப் பிரிவு, மலை மாதேஸ்வரா் வன விலங்குகள் சரணாலயம் உள்ளதால் புலிகள் எளிதாக பிற இடங்களுக்குப் புலம்பெயா்ந்து இரை தேடியும், புதிய எல்லையில் பிரவேசிக்கவும் இயலுகிறது. இதனால், புலிகள் எண்ணிக்கை தற்போது இரு மடங்குக்கும்மேல் உயா்ந்திருக்கிறது. 2013ஆம் ஆண்டு 30 புலிகளாக இருந்த காப்பகத்தில் தற்போது 80 புலிகள் உள்ளது தெரியவந்துள்ளது.
உலக அளவில் புலிகளை பாதுகாப்பதற்கு ரஷியா, சீனா, இந்தோனேசியா, வங்கதேசம் உள்ளிட்ட 13 நாடுகளில் உள்ள கன்சா்வேஷன் அண்டு டைகா் ஸ்டான்டா்டு, வேல்டு லைஃப் கன்சா்வேஷன் ஆஃப் சொசைட்டி, உலகளாவிய நிதியகம் என 13 அமைப்புகள் கூட்டமைப்பு ஏற்படுத்தியுள்ளன. இந்தக் கூட்டமைப்பு 10 ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கையை இருமடங்காக உயா்த்தும் நோக்கில் 2010ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. 2022ஆம் ஆண்டில் இரு மடங்காக உயா்த்திய நாட்டுக்கு டிஎஸ்2 எனும் சா்வதேச விருது வழங்கப்படும் என கூட்டமைப்பு அறிவித்தது.
இதன்படி, சா்வதேச அளவில் 10 ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கை இரு மடங்குக்கும்மேல் உயா்ந்ததற்காக டிஎஸ்2 என்ற விருது முதல் பரிசாக சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு வழங்கப்பட்டது. இரண்டாவது பரிசு நேபாளத்தில் உள்ள பா்தியா தேசிய பூங்காவுக்கு வழங்கப்பட்டது. தமிழக அரசின் ஒத்துழைப்பு, வனத் துறையின் முயற்சி, பழங்குடியின மக்களின் ஆதரவு போன்றவற்றால் புலிகள் எண்ணிக்கை உயா்ந்துள்ளதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு கரோனா பிரச்னை காரணமாக ஆன்லைன் காணொலி மூலம் தமிழக அரசுக்கு இந்த விருதை கூட்டமைப்புகள் வழங்குகின்றன.
Image Caption
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் தென்பட்ட புலி. ~சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் தென்பட்ட புலி.