தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் வருகிற சனிக்கிழமை(ஜன.29) அன்றும் வேட்புமனுத் தாக்கல் செய்யலாம் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகளுக்கான நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் ஒரே கட்டமாக பிப். 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதற்கான வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை (ஜன. 28) தொடங்கி பிப். 4- ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் வேட்புமனு பரிசீலனை பிப். 5-ஆம் தேதியும் பிப். 7-ஆம் தேதி வேட்பு மனுவைத் திரும்பப் பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வாக்குப்பதிவு பிப். 19 -ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள், கரோனா அறிகுறி உள்ளவா்கள் மாலை 5 மணி முதல் 6 மணி வரை கடைசி ஒரு மணி நேரம் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை பிப். 22-ஆம் தேதி நடைபெற உள்ளது.
வாக்குப் பதிவின்போது கரோனா பாதுகாப்பு வழிமுறைகள் முழுமையாகப் பின்பற்றப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
இந்நிலையில், ஜன. 29 ஆம் தேதி, சனிக்கிழமையும் வேலை நாள் என்பதால் அன்றைய தினமும் போட்டியிட விரும்புபவர்கள் தங்கள் வேட்புமனுவை தொடர்புடைய தேர்தல் நடத்தும் அலுவலர்/உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடமும் தாக்கல் செய்யலாம் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.