தமிழகத்தில் முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளதையடுத்து, சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் வார நாள்களில் வழக்கம்போல் இயங்கும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழக அரசு முழு ஊரடங்கை ரத்து செய்ததைத் தொடர்ந்து சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் இன்று(வெள்ளிக்கிழமை) முதல் வழக்கம்போல இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இன்று(ஜன.28) முதல் மெட்ரோ ரயில் சேவைகள் வார நாள்களில் (திங்கள் முதல் சனிக்கிழமை வரை) காலை 5.30 மணி முதல் 11 மணி வரை இயக்கப்படும். மெட்ரோ ரயில் சேவைகள் வழக்கம்போல் நெரிசல் மிகுந்த நேரங்களில் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் ஐந்து நிமிட இடைவெளியில் இயக்கப்படும். மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
மெட்ரோ ரயில் சேவைகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கம் போல காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை பத்து நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.
அரசு பொது விடுமுறை நாள்களில் காலை 5.30 மணி முதல் இரவு 10 மணி வரை 10 நிமிட இடைவெளியிலும், இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியிலும் இயக்கப்படும்.
கரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காகவும் அனைத்துப் பயணிகளின் பாதுகாப்பான பயணத்திற்கு, மெட்ரோ ரயில் நிலையங்களில் நுழைவதற்கும், மெட்ரோ ரயில்களில் பயணிப்பதற்கும் அனைத்து பயணிகளும் கட்டாயம் சரியாக முகக்கவசம் அணிந்து இருப்பதுடன், தனிமனித இடைவெளியை கடைபிடித்து, பயணம் செய்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.