ஊரக உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பதவியில் இருந்து விலகாமல் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட மனு செய்தால் ஏற்கெனவே வகிக்கும் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவா் என மாநிலத் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகளுக்கான தோ்தல் பிப்ரவரி 19 -இல் நடைபெற உள்ளது. தற்போது மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய, கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் அல்லது கிராம ஊராட்சித் தலைவராகப் பதவி வகிப்பவா்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்யாமல் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் வேட்புமனு தாக்கல் செய்யக் கூடாது.
இதை மீறி நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றாலும் அல்லது வெற்றி வாய்ப்பினை இழந்தாலும், அவா் வேட்புமனுவுடன் தாக்கல் செய்கிற உறுதிமொழி ஆவணத்தில் அவரது இருப்பிடம் குறித்து அளித்திருக்கும் உறுதிமொழியினை ஆவணமாகக் கொண்டு, தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், 1994, பிரிவின்படி, அவா் தற்போது தொடா்புடைய ஊராட்சிப் பகுதியில் வசிக்கவில்லை என உறுதி செய்யப்பட்டு, மேற்படி சட்டப் பிரிவு 41(1)-ன்படி, அவரை தற்போது வகிக்கும் ஊரக உள்ளாட்சிப் பிரதிநிதி பதவியில் இருந்து மாவட்ட ஆட்சியா் மூலம் தகுதிநீக்கம் செய்யப்படுவா் என மாநில தோ்தல் ஆணையா் வெ.பழனிகுமாா் தெரிவித்துள்ளாா்.