பூம்புகார்: தை அமாவாசையையொட்டி திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் மூன்று குளங்களில் அஸ்திர தேவருக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம், திருவெண்காட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற சுவேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பித்ருக்களின் லோகத்தின் தலைவனான ருத்ரனின் பாதம் உள்ளது. இந்த ருத்ர பாதத்தில் மூதாதையர் நினைவாக தர்ப்பணம் செய்து வழிபட்டால் இருபத்தி ஏழு தலைமுறைகளில் செய்த பாவம் நீங்கும் என்பது ஐதீகம்.
இதையும் படிக்க | தை அமாவாசை: வேதாரண்யம், கோடியக்கரை கடலில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
மேலும் சிவனின் மூன்று கண்ணிலிருந்து தோன்றிய மூன்று பொறிகள் விழுந்த இடத்தில் சூரியன், சந்திரன் மற்றும் அக்னி பெயரில் 3 குளங்கள் உள்ளன.
திங்கட்கிழமை தை அமாவாசையையொட்டி அஸ்திரதேவர் மேளதாளம் முழங்க மூன்று குளங்களுக்கு எடுத்து வரப்பட்டு தீர்த்தவாரி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினார்கள்.
மேலும் குளக்கரையில் உள்ள ருத்ர பாதத்தில் மூதாதையர் நினைவாக தர்ப்பணம் செய்து வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி முருகன் செய்திருந்தார்.