திருச்சி: இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தை அமாவாசையில் முன்னோர்களுக்கு திதி கொடுக்க அனுமதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து திருச்சி அம்மாமண்டபத்தில் ஆயிரக்கணக்கானோர் திங்கள்கிழமை குவிந்தனர்.
தை அமாவாசை இந்து சமயத்தவர்களுக்கு மிகவும் புனிதமும் சிறப்பானதுமான தினமாகும். தை மாதத்தில் வருகின்ற அமாவாசை தினத்தன்று தாய், தந்தையரை இழந்தோர் தங்களின் பெற்றோர் மற்றும் மூதாதையரை கருத்தில் நினைத்து அமாவாசை நாள்களில் விரதம் கடைபிடிப்பர்.
தை அமாவாசையன்று ஆண்டின் பிற அமாவாசை நாள்களில் விரதம் கடைபிடிக்க இயலாதவர்கள் ஆறு, கடல் போன்ற புனித நீர்நிலைகளில் குளித்து மூதாதையர்களுக்கு படையல் செய்து சிறப்பு பூஜை செய்வர்கள். இதனால் முன்னோர்களின் ஆசிர்வாதம் என்றும் தங்களுக்கும், தங்களது குடும்பத்தினருக்கும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
அதன்படி, தை அமாவாசை தினமான இன்று திருச்சி அம்மா மண்டபம் படித்துறையில், கங்கையின் புனிதமாக கருதப்படும். புனித காவிரி ஆற்றில் நீராடி, பின்னர் தங்களது மூதாதையர்களுக்கு திதி கொடுத்து, ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கி வழிபாடு செய்தனர்.
இதையும் படிக்க | காவிரி ஆற்றில் தண்ணீர் குடிக்க வந்த ஒற்றை யானை
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு திருச்சி அம்மா மண்டபத்தில் முன்னோர்களுக்கு திதி கொடுக்க அனுமதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து மூதாதையர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு செய்வோர்.
இதில், திருச்சி மட்டுமன்றி பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கானோர் வந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து காவிரி தாயாரையும் பின்னர் ஸ்ரீரங்கம், திருவாணைக்காவல், சமயபுரம் உள்ளிட்ட ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு செய்தனர்.
இதேபோன்று அய்யாளம்மன் படித்துறை, ஓடத்துறை, முக்கொம்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள படித்துறைகளில் பொதுமக்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
கடந்த இரண்டு ஆண்டுகள் கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக தை அமாவாசையில் அம்மா மண்டபம் மூடப்பட்டிருந்தது. நிகழாண்டில் அம்மா மண்டபம் படித்துறை திறக்கப்பட்டுள்ளதால் இறந்தவர்களுக்கு திதி கொடுக்க ஆயிரக்கணக்கானனோர் வந்துள்ளனர்.
இதையும் படிக்க | தை அமாவாசை: வேதாரண்யம், கோடியக்கரை கடலில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்