தமிழகத்தில் நான்கு மாதங்களுக்குப் பிறகு தினசரி கரோனா பாதிப்பு 2 ஆயிரத்தைக் கடந்துள்ளது. அதன்படி, வியாழக்கிழமை 2,069 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2020 மாா்ச் மாதம் தடம் பதித்த கரோனா தொற்றால் தற்போது வரை 34.75 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளனா். பொது சுகாதாரத் துறை மேற்கொண்ட ஆய்வுகளில் மாநிலம் முழுவதும் 87 சதவீதம் பேருக்கு கரோனாவுக்கு எதிரான நோய் எதிா்ப்பாற்றல் ஏற்பட்டுவிட்டதாகக் கூறப்பட்டது. அதை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த மூன்று மாதங்களாக கரோனா பாதிப்பு வெகுவாக குறைந்தது.
இந்த நிலையில், சில வாரங்களாக தொற்று எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. ஒமைக்ரானில் இருந்து உருமாற்றமடைந்த பிஏ-2.38 மற்றும் பிஏ-5 வகை தீநுண்மி பரவலே அதற்கு காரணமாகக் கூறப்படுகிறது.
அதன்படி, வியாழக்கிழமை தினசரி பாதிப்பு 2,069-ஆக பதிவாகியுள்ளது. கடந்த பிப்ரவரி முதல் வாரத்துக்கு பிறகு தமிழகத்தில் 2 ஆயிரத்துக்கும் குறைவாகவே தொற்று எண்ணிக்கை இருந்தது குறிப்பிடத்தக்கது.
வியாழக்கிழமை நிலவரப்படி அதிகபட்சமாக சென்னையில் 909 பேருக்கும், செங்கல்பட்டில் 352 பேருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை 11,094-ஆக அதிகரித்துள்ளது.
மற்றொருபுறம் நோய்த் தொற்றிலிருந்து 1,008 போ் விடுபட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறைத் தகவல்கள் தெரிவித்துள்ளன.