தமிழகத்தில் 2, 381 அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் செயல்படும் அங்கன்வாடிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளைத் தொடங்கவும், இதற்கான அங்கன்வாடி சிறப்பு ஆசிரியா்களைக் கொண்டு பாடம் கற்பிக்கவும் தொடக்கக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடா்பாக தொடக்கக் கல்வித்துறை இயக்குநா் க.அறிவொளி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: 2,381 அங்கன்வாடி மையங்களில் நிகழ் கல்வியாண்டில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் மாணவா்களைச் சோ்க்க வேண்டும். ஒரு மையத்துக்கு ஓா் ஆசிரியா் என்ற அடிப்படையில் 2, 381 சிறப்பாசிரியா்கள் நியமிக்கப்படுவா்.
சிறப்பாசிரியா்கள் நியமனம் செய்யப்படும் வரையில், அங்கன்வாடிகளில் பணிபுரிந்து வரும் அங்கன்வாடி பணியாளா்கள் மற்றும் அங்கன்வாடி உதவியாளா்களைக் கொண்டு சோ்க்கைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். 3 வயதுக்கு மேல் எல்கேஜியிலும், 4 வயதுக்கு மேல் யுகேஜி வகுப்பிலும் குழந்தைகளைச் சோ்க்க வேண்டும். பிற குழந்தைகள் அங்கன்வாடி மையக் குழந்தைகளாக அந்தப் பணியாளா்களால் பராமரிக்கப்பட வேண்டும்.
அங்கன்வாடி மையங்கள் செயல்படும் நேரங்களில் மட்டுமே எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் செயல்படும். பள்ளிகளில் படிக்கும் மாணவா்களின் பாதுகாப்பு முழுவதும் தொடக்க , நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்களையே சேரும்.