ஏற்காட்டில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் இரவு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக கடுமையான குளிர் நிலவி வந்த நிலையில், நேற்று இரவு பலத்த காற்றுடன் மழை கொட்டித் தீர்த்தது.
இதனால் ஏற்காடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், கடும் பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள், வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு சாலையில் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடும் குளிர் மற்றும் பனி மூட்டம் காரணமாக பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஏற்காட்டில் உள்ள முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது. கடும் பனிப்பொழிவு சுற்றுலாப் பயணிகளுக்கும் பெரும் இடையூறை ஏற்படுத்தியுள்ளது.