மானாமதுரை: உலகப் புகழ்பெற்ற சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகேயுள்ள இடைக்காட்டூர் திரு இருதய ஆண்டவர் பேராலயத்தில் ஆண்டு பெருவிழாவையொட்டி கடந்த வெள்ளிக்கிழமை இரவு மின்விளக்கு ரத பவனி நடைபெற்றது.
இடைக்காட்டூர் திரு இருதய ஆண்டவர் பேராலயத்தில் ஆண்டு பெருவிழா கடந்த 24 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் பங்கு இறை மக்கள் சார்பில் தினமும் இரவு வெவ்வேறு தலைப்புகளில் திருப்பலி பூஜைகள் நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்வாக நடைபெற்ற மின்விளக்கு ரத பவனியை முன்னிட்டு பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் பங்கு இறை மக்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த கிறிஸ்தவ மக்கள் பங்கேற்று பிரார்த்தனை நடத்தினர்.
இடைக்காட்டூர் திரு இருதய ஆண்டவர் ஆலயத்தின் திருத்தல அதிபர் இமானுவேல் தாசன் தலைமையில் ஏராளமான அருட் பணியாளர்கள் பிரார்த்தனைக் கூட்டத்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து மின்விளக்கு ரத பவனி நடைபெற்றது. திரு இருதய ஆண்டவர் சொரூபம் தாங்கிய மின்விளக்கு ரதம் திரு இருதய ஆண்டவர் பேராலயத்தை சுற்றி வலம் வந்தது. இதில் ஏராளமான கிறித்துவ மக்கள் பங்கேற்றனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை திருத்தல அதிபர் இமானுவேலுதாசன் இடைக்காட்டூர் சமூகம் முன்னேற்ற சங்கம், செல்ஸ் இளைஞர் பேரவை மற்றும் பங்கு இறை மக்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.