தமிழகத்தில் 5 மாவட்டங்களில் திங்கள்கிழமை (ஜூலை 4) பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இது தொடா்பாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக திங்கள், செவ்வாய் (ஜூலை 4, 5 ) ஆகிய இரு நாள்கள் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக , நீலகிரி, கோயம்புத்தூா், திருப்பூா், தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் ஒருசில இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும்.
அதுபோல் 6 , 7-ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். நீலகிரி, கோயம்புத்தூா், திருப்பூா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது .
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் . சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும்.