வேலூர்: வேலூர் மாவட்டத்தில், காதலித்து வந்த கல்லூரி மாணவியை கல்லூரி மாணவன் கத்தியால் குத்திய சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியது.
மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், மாணவனை பிடித்து காவல் துறை விசாரணை நடத்தி வருகிறார்கள். பொது இடத்தில் நடந்த இந்த வன்முறை தாக்குதல் அங்கிருந்தவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
வேலூர் மாவட்டம் குப்பாத்தாமோட்டூர் பகுதியை சேர்ந்த சத்தீஷ்குமார் (20). இவர் வேலூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் ஆர்த்தோ டெக்னீசியன் 4-ம் ஆண்டு படித்து வருகிறார். அதேப் பகுதியை சேர்ந்த 18 வயது பெண் (யாசினி) ராணிப்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் மெடிக்கல் ரெக்காட்ஸ் படித்து வருகிறது.
இவர்கள் இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும் இது தொடர்பாக சத்தீஷ்குமார் வீட்டார் பெண் கேட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது. மேலும் அந்த பெண் வேறு ஒருவரை காதலிப்பதாக சத்தீஷ்குமாருக்கு சந்தேகம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை இருவரும் கல்லூரி செல்ல திருவலம் பேருந்து நிலையத்திற்க்கு வந்துள்ளனர்.
அப்போது அருகில் இருந்த பிள்ளையார் கோவில் எதிரில் நின்று பேசிக்கொண்டிருக்கும் போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சத்தீஷ்குமார், அந்தப் பெண்ணை தான் மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியால் திடீரென கழுத்தில் குத்தியுள்ளார். இதில் நீலைகுழைந்து கீழே விழுந்த அந்த பெண் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துள்ளார். அவரை மீட்ட பொது மக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வேலூரில் உள்ள சிஎம்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்து விரைந்து வந்த திருவலம் காவல்துறையினர் கல்லூரி மாணவன் சத்தீஷ்குமாரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இருவருக்கும் ஏற்கனவே ரகசிய திருமணம் ஆகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.