திருப்பூர் - பல்லடம் அருகே ராயர்பாளையத்தில் சாலையோரம் இருக்கும் ஒரு பள்ளத்தால், தொடர்ந்து அங்கு விபத்துகள் நேரிட்டு வருவது மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே நாளில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் இரண்டு மகன்கள் தனித்தனியாக இந்த பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கியுள்ளனர்.
திருப்பூரைச் சேர்ந்த அருண் - சசி என்ற சகோதரர்கள், இருசக்கர வாகன்ததில் இன்று காலை பல்லடம் நோக்கி வந்து கொண்டிருந்த போது, ராயர்பாளையத்தில் சாலையோரம் இருந்த பள்ளத்தால், தவறி விழுந்து விபத்துக்குள்ளாகினர். இருவரும் காயங்களுடன் பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருந்த அவர்களது தந்தை, மகன்களின் வாகனம் விபத்துக்குள்ளான அதே ராயர்பாளையத்தில், சற்று தொலைவில் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானார். இந்த விபத்துக்காட்சி வெளியாகியிருக்கிறது.
இதே இடத்தில்தான், இரண்டு வாரங்களுக்கு முன்பு, ஒரு மாணவி நடந்து சென்ற போது, அதே பள்ளத்தால், இருசக்கர வாகனம் அவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இவ்வாறு தொடர் விபத்துகளை ஏற்படுத்தும் சாலைப் பள்ளங்களைக் கூட சீர் செய்யாமல் இருப்பது குறித்து பொதுமக்கள் மிகுந்த அதிருப்தி அடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.