மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர் மட்டம் 257 நாள்களுக்கு பிறகு வியாழக்கிழமை நள்ளிரவில் 100 அடிக்கு கீழே சரிந்தது.
கடந்த ஆண்டு காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வந்த தொடர் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. நீர் வரத்து காரணமாக கிடுகிடுவென உயர்ந்த அணையின் நீர் மட்டம் அக்டோபர் 24 ஆம் தேதி 100 அடியாக உயர்ந்தது.
இதனையடுத்து பருவமழை காரணமாக நவம்பர் 13ஆம் தேதி மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியாக உயர்ந்து
பருவமழை தனிந்ததாலும் தொடர்ந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வந்ததாலும் டிசம்பர் 25 ஆம் தேதி முதல் அணையின் நீர் மட்டம் மெல்ல குறைந்து வந்தது.
இதையும் படிக்க | செல்வ வளங்களைப் பெருக்க உதவும் நன்னிமங்கலம் மீனாட்சி சுந்தரேசுவரர்
ஜனவரி 28 ஆம் தேதி பாசனத்திற்கு திறத்கப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டது. குடிநீர் தேவைக்காக மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. இதனால் அணையின் நீர் மட்டம் 100 அடிக்கு கீழே குறையாமல் இருந்து வந்தது.
அணையின் நீர் இருப்பும் வரத்தும் திருப்திகரமாக இருந்ததால் விவசாயிகளின் வேண்டுகொளை ஏற்று குறிப்பிட்ட நாளான ஜூன் 12-க்கு முன்பாகவே குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து சரிந்து வந்தது. இதனால் மேட்டூர் அணையின் நீர் மட்டமும் மளமளவென சரிந்து வந்தது. அணையின் நீர் மட்டம் 257 நாள்களுக்கு பிறகு வியாழக்கிழமை (ஜூலை 7) நள்ளிரவில் 100 அடிக்கு கீழே சரிந்துள்ளது.
வெள்ளிக்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர் மட்டம் 99.59 அடியாக சரிந்தது. அணைக்கு வினாடிக்கு 2,107 கனஅடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருந்தது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 64.31 டி.எம்.சியாக இருந்தது.