மேட்டூர்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 8,010 கன அடியாக அதிகரித்துள்ளது.
கர்நாடகம் மாநிலத்தில் காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளிலும், கேரளம் மாநிலம் வயநாட்டிலும் கனமழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக கர்நாடகத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகள் நிரம்பியதால் ஆணைகளின் பாதுகாப்பு கருதி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக அதிகரித்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை வினாடிக்கு 3,149 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து திங்கள்கிழமை காலை வினாடிக்கு 8,010 கன அடியாக அதிகரித்து உள்ளது.
இதையும் படிக்க | அதிமுக பொதுக்குழுவுக்கு புறப்பட்டார் எடப்பாடி பழனிசாமி!
நீர் வரத்து அதிகரித்தாலும் அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் திங்கள்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 98.29 அடியிலிருந்து 98 அடியாக சரிந்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 62.27 டி.எம்.சியாக உள்ளது.
கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு சுமார் 1,04,356 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு மேலும் அதிகரிக்கும் என்று நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.