கம்பம்: கேரளத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக முல்லைப் பெரியாறு அணைக்கு ஒரே நாளில் 1,144 கன அடி தண்ணீர் கூடுதலாக வந்தது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள கேரளத்தில் தற்போது தென்மேற்குப் பருவமழை பெய்து வருகிறது. இதனால் அணைக்குள் நீர் வரத்து அதிகரித்து வருகிறது.
திங்கள்கிழமை அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான பெரியாறு அணையில், 43 மில்லி மீட்டர் மழையும், தேக்கடியில், 28 மில்லி மீட்டர் மழையும் பெய்தது, இதனால் அணைக்கு வினாடிக்கு, 2,122 கன அடி தண்ணீர் வந்தது.
செவ்வாய்க்கிழமை பெரியாறு அணையில், 44 மில்லிமீட்டர் மழையும், தேக்கடி ஏரியில், 13 மி.மீ. மழையும் பெய்தது. இதனால் அணைக்கு வினாடிக்கு 3,266 கன அடி தண்ணீர் வந்தது. அதாவது ஒரே நாளில் வினாடிக்கு 1,144 கன அடி தண்ணீர் கூடுதலாக வந்தது குறிப்பிடத்தக்கது.
அணை நிலவரம்
முல்லைப் பெரியாறு அணையில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி நீர் மட்டம் 129.05 அடி உயரமாகவும் (மொத்த உயரம் 142 அடி), அணைக்குள் நீர் இருப்பு 4,493 மில்லியன் கன அடியாகவும், நீர் வரத்து வினாடிக்கு 3,266 கன அடியாகவும், தமிழக பகுதிக்கு நீர் வெளியேற்றம் வினாடிக்கு 1,655 கன அடியாகவும் இருந்தது. தற்போது தொடர் மழை பெய்து வருவதால் அணைக்குள் நீர் வரத்து அதிகரித்து வரலாம் என்று அணை பொறியாளர் ஒருவர் தெரிவித்தார்.
மின்சார உற்பத்தி
தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில் உள்ள 4 மின்னாக்கிகளில் இரண்டு மின்னாக்கிகளில் தலா, 42 மெகாவாட்டும், மற்ற இரண்டு மின்னாக்கிகளில் தலா 32 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி என மொத்தம் 148 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது, நான்கு மின்னாக்கிகளும் கடந்த ஜூலை4 இல் இருந்து இயங்கி வருகிறது.