திருப்பூர்: திருப்பூர் மாஸ்கோ நகர் 2வது வீதியை சேர்ந்தவர் சாமிநாதன். இவரது மகன்கள் நாகராஜ்(28) , கார்த்திக் (26). இருவருக்கும் திருமணம் ஆகவில்லை. இருவரும் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர்.
இந்த நிலையில் நாகராஜ் பெயரில் இரண்டு சென்ட் இடம் மாஸ்கோ நகரில் உள்ளது. அந்த இடத்தை தனது பெயருக்கு எழுதித் தரும்படி தம்பி கார்த்திக் கேட்டுள்ளார். ஆனால் நாகராஜ் எழுதிக் கொடுக்கவில்லை என தெரிகிறது.நேற்று இரவு வேலை முடிந்து வந்த இருவரும் வீட்டில் இருந்து மது அருந்தி உள்ளனர். அப்போது கார்த்திக் மீண்டும் நாகராஜிடம் இடத்தை தனது பெயருக்கு எழுதி கேட்டுள்ளார்.
இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறி உள்ளது. இதில் ஆத்திரமடைந்த கார்த்திக் வீட்டில் முன்புறம் கிடந்த கட்டையால் அண்ணன் நாகராஜை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த நாகராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கார்த்திக் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இன்று காலை நாகராஜ் பிணமாக கிடைப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் திருப்பூர் வடக்கு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அண்ணனை கொலை செய்து விட்டு தப்பி ஓடிய தம்பி கார்த்திக்கை தேடி வருகின்றனர்.