நாமக்கல்: நாமக்கல் அருகே திமுக மாநாட்டு முகப்பு சரிந்து விழுந்ததில் தொழிலாளர்கள 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
நாமக்கல் பொம்மைக்குட்டைமேட்டில், கடந்த 3ஆம் தேதி திமுக சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்றது. இதில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு துறை அமைச்சர்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்கள், உறுப்பினர்கள் என 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டின் வெளியே சென்னை ரிப்பன் மாளிகை வடிவிலான வரவேற்பு முகப்பு அமைக்கப்பட்டிருந்தது.
மாநாடுக்கு பின் அந்த பந்தலை பிரிக்கும் பணி கடந்த 10 நாள்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் புதன்கிழமை பிற்பகல் 5 மணியளவில் அப்பகுதியில் பலத்த காற்று வீசியது.
அப்போது ரிப்பன் மாளிகை முகப்பு காற்றில் அப்பளம் போல் நொறுங்கி விழுந்தது. அந்த இடத்தில் காற்றாலைக்கு செல்லும் இரண்டு லாரிகள் மிகப்பெரிய காற்றாலை மின் இறக்கையுடன் நிறுத்தப்பட்டிருந்தன. ரிப்பன் கட்டட முகப்புக்கு கட்டப்பட்ட மரக்கட்டைகள் அங்கிருந்தோர் மீது விழுந்ததில் 10–க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் நாமக்கல் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து நல்லிபாளையம் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.