நீலகிரி: நீலகிரியில் கடந்த இரண்டு நாள்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் குந்தா, கெத்தை, பில்லூர் அணைகள் எந்நேரத்திலும் திறக்கப்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நீலகிரியில், கடந்த சில நாள்களாக தென் மேற்கு பருவ மழை பரவலாக பெய்து வருகிறது. கடந்த மூன்று நாள்களாக மழை தீவிரமடைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிள்ள அப்பர்பவானி, காட்டு குப்பை, பார்சன்ஸ்வேலி, மரவ கண்டி, பைக்காரா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், குந்தா மற்றும் பைக்காரா மின் வட்டத்திற்கு உட்பட்ட அப்பர் பவானி, அவலாஞ்சி, எமரால்டு, குந்தா, கெத்தை, பைக்காரா, பார்சன்ஸ்வேலி, மாயார் உள்ளிட்ட அணைகளுக்கு, இன்று காலை, 6:00 மணி நிலவரப்படி, வினாடிக்கு, 250 கன அடி முதல் 300 கன அடி வரை அணைக்கு தண்ணீர் வரத்து வந்து கொண்டிருக்கிறது.
இதையும் படிக்க | கோத்தபய ராஜபட்ச பதவி விலக தாமதிப்பது ஏன்?
அணைகள் திறப்பு?
குந்தா, பைக்காரா ஆகிய மின் வட்டத்தின் கீழ், 12 மின் நிலையம், 13 அணைகள் உள்ளன. இன்று காலை 6:00 மணி நிலவரப்படி அணைகளுக்கு வினாடிக்கு 300 கன அடி வரை தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. குந்தா அணையின் மொத்த அடியான 89 அடிக்கு 89.5 அடி வரையும், கெத்தை அணை 156 - 155.5 அடி வரை நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
அதேபோல், கோவை மாவட்டம் பில்லூர் அணையும் 100 அடியை எட்டியுள்ளது. மேற்கண்ட மூன்று அணைகளின் பாதுகாப்பு கருதி எந்நேரத்திலும் அணைகள் திறக்கப்பட்டு உபரி நீர் வெளியேற்றப்பட இருப்பதாக மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.