அதிமுகவை அவர்களே அழித்துவிடுவார்கள்: உதயநிதி ஸ்டாலின் பேச்சு
அதிமுகவை அவர்களே அழித்துவிடுவார்கள் என்றும், அதிமுகவுக்கு என்று ஒரு பெரிய வரலாறு எதுவும் இல்லை. ஆனால், நமக்கு என்று ஒரு பெரிய வரலாறு உள்ளது என திமுக இளைஞர் அணி செயலாளரும், பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
காஞ்சிபுரத்தில் கழக முன்னோடிகள் 2083 பேருக்கு பொற்கிழி வழங்கியது, 422 பேருக்கு தையல் இயந்திரங்கள் வழங்கியது, பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் முதலிடம் பெற்ற 188 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா ஆகியன காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே கலைஞர் திடலில் அமைக்கப்பட்ட பிரமாண்டமான பந்தலில் நடைபெற்றது.
விழாவிற்கு கட்சியின் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளரும், உத்திரமேரூர் பேரவை உறுப்பினருமான க. சுந்தர் தலைமை வகித்தார். எம்பி க. செல்வம், பேரவை உறுப்பினர் எழிலரசன் ஆகியோர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் நலத்திட்ட உதவிகளை வழங்கி கழக இளைஞர் அணியின் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: அதிமுகவில் அவர்களே அடித்துக் கொள்கிறார்கள், திட்டிக் கொள்கிறார்கள், அவர்களே அவர்கள் மீது கல் எரிந்து கொள்கிறார்கள். எனவே, அதிமுகவை அவர்களே அழித்து விடுவார்கள். அந்த கட்சிக்கு என்று ஒரு பெரிய வரலாறு எதுவும் இல்லை. ஆனால், நமக்கு என்று ஒரு பெரிய வரலாறு உள்ளது.
நடந்து முடிந்த தேர்தலில் கட்சிக்கு பெரிய வெற்றியை தேடித்தந்த கழகத்தின் மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்குவதில் பெருமைப்படுகிறேன். நான் வரும் வழிநெடுகிலும் மக்கள் ஆட்சியின் மீது நம்பிக்கை வைத்து மனுக்கள் தந்தார்கள். அவர்கள் கொடுத்த அத்தனை மனுக்களுக்கும் தீர்வு காணப்படும். நமது ஆட்சியின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து அவர்களது கோரிக்கையை நிறைவேற்றுவோம் என்ற நம்பிக்கையுடன் கோரிக்கை மனுக்களை தருகிறார்கள். இதுவே நமக்கு கிடைத்த வெற்றி.
வரும் வழியெல்லாம் என்னை வழிமறித்து தலைவருக்கு கரோனா பாதிக்கப்பட்டுள்ளது. அவரை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று அன்பு வேண்டுகோள் வைத்தார்கள் என்று உதயநிதி பேசினார்.
விழாவில் திமுக ஒன்றிய கழக செயலாளர் குமார், கே ஞானசேகரன், டி குமார், காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி யுவராஜ் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அப்துல் மாலிக் வாலாஜாபாத் ஒன்றிய குழு தலைவர் தேவேந்திரன் ஆகியோர் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.