மேட்டூர் அணைக்கு வினாடிக்கு ஒரு லட்சத்து 9 ஆயிரம் கன அடி வீதம் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்குள் நிரம்பும் வாய்ப்பு உள்ளது.
கேரளம் மாநிலம் வயநாட்டிலும், கர்நாடகம் மாநிலம் காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளிலும் மீண்டும் தீவிரமடைந்த தென்மேற்கு பருவமழையால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வியாழக்கிழமை காலை வினாடிக்கு1,20,000 கன அடி அளவிற்க்கு காவிரியில் உபரி நீர் திறக்கப்பட்டது.
கர்நாடக அணைகளில் திறக்கப்பட்ட உபரி நீர் சற்று முன் வினாடிக்கு ஒரு லட்சத்து 9 ஆயிரம் கன அடி வீதம் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை பகல் 12 மணிக்கு 113.96 அடியிலிருந்து 114.81 அடியாக உயர்ந்துள்ளது.
தற்பொழுது மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்குள் நிரம்பும் வாய்ப்பு உள்ளது.
மேட்டூர் அணையிலிருந்து 16 கண் உபரி நீர் போக்கி வழியாக எந்த நேரத்திலும் உபரிநீர் திறக்கப்படலாம் என்பதால் அதற்கான முன்னேற்பாட்டிற்கான பணிகளில் நீர்வளத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.