கம்பம்: தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டியுள்ளது.
லோயர்கேம்ப்பில் உள்ள பெரியாறு நீர் மின்சார நிலையத்தில், அதன் முழு உற்பத்தியளவான, 168 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி தொடங்கியது.
கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்து வருகிறது, இதனால் முல்லைப் பெரியாறு அணையில் நீர்வரத்தும் அதிகரித்து வருகிறது. வெள்ளிக்கிழமை அணையின் நீர்மட்டம், 133.20 அடியாக இருந்தது, நீர் வரத்து விநாடிக்கு, 8,143 கன அடியாக வந்தது, இதனால் சனிக்கிழமை அணையின் நீர்மட்டம் 135 அடி உயரத்தை எட்டியது, அதாவது ஒரேநாளில் 1.80 அடி உயர்ந்தது. சனிக்கிழமை நீர் வரத்து விநாடிக்கு 6,700 கன அடியாக வந்தது.
இதுபற்றி அணை பொறியாளர் ஒருவர், 'அணைக்குள் தொடர் நீர் வரத்து உள்ளது, ஆதலால் நீர் மட்டம் 136 அடியை இன்று இரவுக்குள் எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது' என்றார்.
அணை நிலவரம்
சனிக்கிழமை நிலவரப்படி அணையின் நீர்மட்டம்,135.0 அடியாக இருந்தது (மொத்த உயரம் 152 அடி), அணைக்குள் நீர் இருப்பு 5,866 மில்லியன் கன அடியாகவும், நீர் வரத்து விநாடிக்கு, 6,700 கன அடியாகவும், தமிழக பகுதிக்கு நீர் வெளியேற்றம் விநாடிக்கு, 1,867 கன அடியாகவும் இருந்தது. அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளான பெரியாறு அணையில் 52.6 மில்லிமீட்டர் மழையும், தேக்கடி ஏரியில், 21.2 மி.மீ. மழையும் பெய்தது.
மின்சார உற்பத்தி
தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில், உள்ள பெரியாறு மின்சார உற்பத்தி நிலையத்தில் நான்கு மின்னாக்கிகளில் மின்சாரம் கடந்த ஜூலை 4 முதல் உற்பத்தி செய்யப்படுகிறது.
தற்போது அணையிலிருந்து தமிழக பகுதிக்கு விநாடிக்கு, 1,867 கன அடி திறக்கப்படுகிறது, இதன் மூலம் லோயர்கேம்ப்பில் உள்ள நான்கு மின்னாக்கிகளில் தலா, 42 மெகாவாட் என மொத்தம், 168 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி தொடங்கியது, இது பெரியாறு மின்சார நிலையத்தின் முழு உற்பத்தி அளவாகும்.
இதையும் படிக்க | முழு கொள்ளளவை எட்டியது மேட்டூர் அணை!