செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக அரசுத் தரப்பில் இன்று நேரில் அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்தியாவில் முதல்முறையாக சென்னை மாமல்லபுரத்தில் வரும் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது.
இந்நிலையில், இதன் தொடக்கவிழாவில் கலந்துகொள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, கரோனாவால் முதல்வர் மு.க. ஸ்டாலின் பாதிக்கப்பட்ட போது தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி நலம் விசாரித்தார். அப்போது, சென்னையில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் துவக்கவிழாவில் அவசியம் பங்கேற்க வேண்டும் என்று மோடிக்கு அழைப்பு விடுத்தார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.
இதன் தொடர்ச்சியாக, செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பிரதமர் மோடி பங்கேற்க, தமிழக எம்.பி.க்கள் டி.ஆர். பாலு, கனிமொழி, விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் உள்ளிட்டோர் இன்று நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.
செஸ் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் மாமல்லபுரத்தில் ஒருபுறம் நடைபெற்றுவரும் வேளையில், தொடக்க விழா மற்றும் நிறைவு நிகழ்ச்சிகளை பிரம்மாண்ட முறையில் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கென சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.