மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட 1.25 லட்சம் கன அடி தண்ணீர் சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஆற்றின் வழியே பழையாறு கடலில் கலந்தது.
ஆற்றின் கரையோரம் மற்றும் திட்டு பகுதி கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க அதிகாரிகள் அறிவுறுத்தல்.
கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள அணைகளில் இருந்து அதிகப்படியான உபரி நீரானது தமிழக பகுதிக்கு வந்து வண்ணம் உள்ளது.
இந்நிலையில் மேட்டூர் அணை நிரம்பியதையடுத்து அணைக்கு வரும் ஒரு லட்சத்து 25 ஆயிரம் கன அடி நீரானது முழுவதுமாக கொள்ளிடம் ஆற்றின் வழியே திருப்பி விடப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் திறக்கப்பட்ட தண்ணீரானது இன்று மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஆற்றின் வழியே சென்று பழையாறு அருகே கடலில் கலந்தது.
கொள்ளிடம் பாலத்தில் ஆர்ப்பரித்துச் செல்லும் தண்ணீரை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து ரசித்து செல்பி எடுத்து மகிழ்ந்தனர். அவ்வழியாக வாகனங்களில் ஆற்று வெள்ளத்தை பார்த்து செல்வதால் வாகன நெரில் ஏற்பட்டது.
அதே நேரம் கொள்ளிடம் ஆற்றின் கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்கள் மற்றும் ஆற்றின் நடுவே அமைந்துள்ள திட்டு கிராமங்களில் வசிக்கும் மக்கள் மற்றும் கால்நடைகளை பாதுகாப்பாக மேடான பகுதிகளுக்கு அழைத்துச்செல்ல வருவாய்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.