கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் நடந்த வன்முறை தொடர்பாக விசாரணை நடத்த 18 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
6 டி.எஸ்.பி.க்கள், 9 ஆய்வாளர்கள், 3 சைபர் கிரைம் அதிகாரிகள் வரும் 21ஆம் தேதி சேலம் டிஐஜி அலுவலகத்திற்கு வர உத்தரவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் இயங்கி வந்த தனியாா் பள்ளி மாணவி இறப்பு தொடா்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 17) நடைபெற்ற இளைஞா்களின் போராட்டம் பெரும் வன்முறையாக மாறியது.
இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இது தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. விடியோக்கள் மூலம் அடையாளம் காணப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
மாணவியின் உடலுக்கு நேற்று மாலை மறுகூறாய்வு செய்யப்பட்டது. மாணவியின் மரணத்தில் மர்மம் உள்ளதாகவும், உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் மாணவியின் பெற்றோர் உள்பட பல்வேறு தரப்புகளிலிருந்து கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில், கனியாமூர் வன்முறை தொடர்பாக தற்போது 18 பேர் கொண்ட குழுவை தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு நியமித்துள்ளார். 6 டி.எஸ்.பி.க்கள், 9 ஆய்வாளர்கள், 3 சைபர் கிரைம் அதிகாரிகள் வரும் 21ஆம் தேதி சேலம் டிஐஜி அலுவலகத்திற்கு வர உத்தரவிட்டுள்ளார்.